tamilnadu

img

காய்ச்சல் அறிவியலும் அல்லோபதி மருத்துவமும்

பேசும் காச்சக்காரம்மன் – 3

காய்ச்சல் வந்த பிள்ளையின் நெற்றியைத் தொட்டுப் பார்த்து ஆம், காய்ச்சல் அடிக்கிறது  என்று புரிந்து கொள்வதற்கும், அதே குழந்தையை  மருத்துவர்கள் தெர்மோமீட்டரை வைத்து பரிசோதித்து விட்டு காய்ச்சல் எதுவும் இல்லையே! என்று சொல்வ தற்கும் இடையேயான அறிவியலை நாம் இன்னும் முழுவதுமாக விளங்கிக் கொள்ளவில்லை. உடல் சூடாக இருப்பதே காய்ச்சல் என்கிற பொதுவான புரிதல் நம்மிடம் இருந்தாலும் இன்றளவும் அது கிருமித் தொற்றுக்கான அறிகுறியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றிற்கும் உள் மைய வெப்பநிலை (Core Temperature) என்று இருக்கிறது.  நாம் உயிர் வாழ்கின்ற பூமியின் உள் மைய வெப்பநிலை  தோராயமாக 10,800° F. அதே போல சூரியனுக்கு, மற்ற கோள்களுக்கு, ஏனைய ஜீவராசிகளுக்கு என்று  இருப்பதைப் போல மனிதனுக்கென்றும் உள் மைய வெப்பநிலை என்று இருக்கிறது. மனிதனின் உள் மைய வெப்பநிலை தோராயமாக 98.6° F. மருத்துவ மனைகளில் தெர்மோமீட்டரை வாயில் வைத்தும், அக்குள் பகுதிக்குள் வைத்தும் பார்ப்பது நமது உள்  மைய வெப்பநிலைதானே ஒழிய தோலின் வெப்ப நிலையை அல்ல.

உள் மைய வெப்பநிலை என்பது நமது உடலை சீராக ஒரு வெப்பநிலைக்குள் வைத்திருக்கிற ஒரு  கட்டுப்பாட்டு சிஸ்டம்தான். அதாவது உடல் வெப்ப நிலையை சராசரியாக 96° F முதல் 100° F வெப்ப நிலைக்குள் பராமரிப்பது தான் அதனுடைய வேலை. அதன் கட்டுப்பாட்டு அறை மூளையின் ஹைப்போதலாமஸ் என்கிற அதிமுக்கியமான பகுதியில்தான் இயங்கி வருகிறது. இத்தகைய சராசரி வெப்பநிலையில் தான் மனித உறுப்புகள் அத்தனையும் சரியான விகிதத்தில் வேலை செய்கிறது. அதனால் தான் நமக்கு 100° F க்கு மேல் உடல் கொதியாய் கொதிக்கும்போதும், 96° F க்கு கீழ் உடல் குளிர்ந்து நடுக்கம் கொள்கின்ற போதும் உடல் உறுப்புகளின் செயல் தன்மை குறைந்து ஒவ்வொன்றாய் வேலை செய்ய மாட்டேன் என்று கொடி பிடிக்க ஆரம்பிக்கின்றன. இப்படியாக 100° F க்கு மேலாக உடல் வெப்பநிலை கூடுகின்ற போது அதை நாம் காய்ச்சல் என்றும், 96° F க்கு கீழாக குறைகின்ற போது அதனை உடல் வெப்பக் குறைபாடு அல்லது சீதளம் என்றும் கூறிக் கொள்கிறோம். நாம் ஏற்கனவே காய்ச்சல் என்பதை உடலின் நோய்க்கான அறிகுறி என்று பார்த்தோம். சரி, அப்படி யானால் உடலில் நோய்த்தொற்று இல்லாத போதும் உடல் வெப்பநிலை கூடினால் அதனையும் காய்ச்சல் என்றுதானே சொல்ல வேண்டியிருக்கும் என்கிற குழப்பம் வருகிறது அல்லவா. ஆம், உண்மைதான். ஏனென்றால் உடற் பயிற்சி செய்கின்ற போதும், ஏன் கேன்சர் நோய் வந்தவர்களுக்கும்கூட நோய்த்தொற்று இல்லாமலே உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் வருகிறதே? வாருங்கள், அதைப் புரிந்து கொள்ளத்தான் நம் உடலைப் பற்றிய ஒரு சின்ன ப்ளாஸ் பேக்.

நம்முடைய உடலில் தோராயமாக 37.2 இலட்சம் கோடி செல்கள் இருப்பதாக விஞ்ஞானிகளால் கண்டறி யப்பட்டுள்ளது. நம்முடைய தோல், தசை, நரம்பு, எலும்பு, இரத்தம், குடல், இதயம், சிறுநீரகம் என்பன  உள்ளிட்ட அத்தனையும் பல கோடி செல்களால் ஆனது தான். அத்தகைய ஒவ்வொரு செல்லிலும் பொழு திற்கும் வேலை நடந்து கொண்டேதான் இருக்கும். ஒரு இன்ஜின் வேலை செய்து கொண்டேயிருந்தால் அதிலிருந்து வெப்பம் வெளியேறுவதைப் போல, ஒவ்வொரு செல்லிலிருந்தும் தொடர்ந்து வெப்பம் வெளியேறிக் கொண்டேதான் இருக்கும். நீங்கள் தீக்க திர் நாளிதழை கையில் பிடித்துக் கொண்டு இக்கட்டு ரையை படித்துக் கொண்டிருக்கையில்கூட அத்தகைய  சிறு உழைப்பிற்காக உங்களால் உணர முடியாத அள வில் வெப்பம் வெளியேறிக் கொண்டுதானிருக்கும். ஆஹா! அப்படியானால் அவ்வளவு வெப்பமும் ஒன்றாக சேர்ந்தால் சூரியனைப் போல கதகத வென்று எரிந்து நாம் சாம்பலாகிவிடுவோமே? இல்லை,  அப்படி ஆகாமல் இருப்பதைத் தடுக்கத்தான் ஹைப்போதலாமஸ் என்கிற வெப்பநிலை கட்டுப்பாட்டு அறை ஒன்று இருக்கிறது. உடலின் வெப்ப நிலையை 96° F -100° F க்குள் வைத்திருக்க அது பகல்,  இரவென்று பாராது தொடர்ந்து வேலை செய்த வண்ண மாயிருக்கிறது. உதாரணமாக, நீங்கள் ஜிம்முக்கு சென்று 50 கிலோ  100 கிலோ என்று உடற்பயிற்சி செய்துவிட்டு வெளியே  வருகின்றபோது உடல் வியர்த்துக் கொட்டியிருக்கும். உடல் கதகதப்பாக இருக்கும். அந்த சமயத்தில் அம்மாக்கள் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டால், அவ்வளவுதான். பயலுக்கு காய்ச்சல் வந்துடுச்சே! என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடு வார்கள். ஆனால் உண்மையில் உடலில் நடப்ப தென்னவோ வேறு விசயம்.

உடற்பயிற்சி செய்வதால் சம்பந்தப்பட்ட தசைகள் செயற்கையாக அதிகம் வேலை வாங்கப்படுகிறது. இப்படியாக தசைகள் குறிப்பிட்ட வேலையை அதிகமாக செய்வதால் ஏற்படுகிற தசைநார்களின் உராய்வின் காரணமாகவும், அத்தகைய தசை செல்களின் ஓயாத வேலையாலும் வெளிப்படுகிற வெப்பத்தை வெளியேற்ற ஹைப்போதலாமல் ஒரு  முடிவிற்கு வருகிறது. அதாவது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வது. அதுவும் முக்கிய மாக தோலுக்கு அடியிலுள்ள நுண்ணிய இரத்தக் குழாய்களுக்கு இரத்தத்தை அதிகமாக அனுப்புவது. அதன் வழியே உடலின் உள் வெப்பத்தை இரத்ததின்  வழியே தோலுக்கு அனுப்பி அதனை வியர்வையாக வெளியேற்றுகிறது. ஏனென்றால் நமது உடலில் மிகப் பெரிய உறுப்பு  தோல்தான். சுமார் 22 சதுர அடி பரப்பளவில் நம் உடலைச்  சூழ்ந்துள்ளது. மேலும் தோலானது சுற்றுப்புற சூழலோடு  அதிகளவு தொடர்புடையதாக இருப்பதால், நம் உட லில் வெளியாகின்ற வெப்பத்தை சுற்றுப்புறத்திலுள்ள வெப்பத்தோடு அதனால் எளிதாக பரிமாறிக் கொள்ள  முடிகிறது. தோலுமே பிரதிபலிக்கிற கண்ணாடியாக  செயல்பட்டு உள் மற்றும் வெளி வெப்பநிலைக்கு ஏற்ப  சூடாகவும், குளிராகவும் மாற்றியபடி தன்னை தகவ மைத்துக் கொள்கிறது. இப்படியாக தோலின் வழியே ஹைப்போதலாமஸ் உடல் வெப்பநிலையைக் குறைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரு கிறது.  அதேபோல குளிருக்கு இதமாக உடல் கதகதப்பாக  மாறிக்கொள்வதும்கூட பாதுகாப்பு தகவமைப்பு முறையே அன்றி, நோயல்ல. எனவேதான் தோலில் தொட்டுப் பார்த்து உணர்கிற வெப்பநிலைக்கும், தெர்மோமீட்டர் வழியே உள் மைய வெப்பநிலையை அறிவதற்குமான வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால்தான் உடல்  சூடாகிறதே ஒழிய நோய்த்தொற்றால் அல்ல என்பதை  நாம் அந்த பாசக்கார அம்மாவிடம் எடுத்துச் சொல்ல  வேண்டியிருக்கிறது. சரி, விஷயத்திற்கு வருவோம். அப்படியென்றால் கிருமித்தொற்று ஏற்படும்போது காய்ச்சல் அடிக்கி றதே, அதாவது உடல் வெப்பநிலை கூடுகிறதே, அதை  எப்படி விளக்கப் போகிறீர்கள்?  என்றுதானே கேட்கி றீர்கள்.

நம்முடைய நிலத்தில் வேறெருவர் வந்து இது  என்னுடைய இடம், இனிமேல் எனக்குத்தான் சொந்தம்  என்று சொல்லி நம்முடைய வளங்களையெல்லாம் கைப்பற்றப் பார்க்கிறார்கள் என்றால் சும்மா இருப்போமா? நம்முடைய மூதாதையர் இடத்தையே யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் போராடி மீட்போம் தானே. அதேபோல் நமது மூதாதையரிடமிருந்து தலை முறை தலைமுறையாக நோய்களை எதிர்த்துப் போராடிப் பெற்ற மரபணுக்கள் நம்முடைய உடலுக்குள்  இருக்கிற போது ஒரு நோய்கிருமி உள்ளே வந்து, என்ன  செய்கிறேன் பார்! என்றால் நம்முடைய இரத்தத்தில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தி மூலக்கூறுகள் எல்லாம்  கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்குமா என்ன? கிருமிகளில் பல வகை உண்டு. அது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஒட்டுண்ணிகள் என பல வகைகள்  இருந்தாலும் நமக்கு அவையெல்லாமே எதிரிகள்தான்.  ஒவ்வொரு கிருமிகளும் மனித உடலுக்குள் நுழைய தனக்கென ஒரு வழியை விவரமாக தேர்ந்தெடுத்து வைத்திருக்கும். உதாரணமாக, டைபாய்டு காயச்சலை  பரப்புகிற சால்மோனெல்லா கிருமி கெட்டுப்போன உணவை உண்ணுவதன் மூலம் உணவுக்குழாய் வழியேவும், ஏடிஸ் கொசு கடிப்பதன் வழியே ஆர்போ வைரஸ்கள் இரத்தத்தில் கலந்து டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல் பரப்புவதையும் வைத்தே அதை நாம் புரிந்து கொள்ள முடியும். இப்படி அதிரடியாக உள்நுழைகின்ற கிருமிகளில்  சில எடுத்த எடுப்பிலேயே இரத்தத்திற்குள் நுழைந்து விடாது. அவை உள்ளே நுழைகின்ற இடத்தை ஆக்கிர மித்து முதலில் அந்த இடத்திலுள்ள செல்களை யெல்லாம் அழித்து சாப்பிட ஆரம்பிக்கும். உடனே நோய் எதிர்ப்பாற்றலின் முதல் நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட செல்களின் அருகாமையிலுள்ள நியூட்ரோபில், திசு மேக்ரோபேஜ்களைக் கொண்ட போராட்டக்குழு உள்ளே நுழைந்து அந்த கிருமி களோடு எதிர்த்து சண்டையிடுகிறது. சில சமயங்களில்  இவையே கிருமிகளைச் சமாளித்து நோய்களை பரவவிடாமல் தடுத்துவிடும். ஆனால் அதுவே வீரிய முள்ள கிருமியாக இருந்தால் நுழைந்த இடத்தை பாழாக்கிவிட்டு இரத்தத்திற்குள் நுழைந்து மற்ற உறுப்புகளுக்கும் பயணிக்க ஆரம்பித்துவிடும். ஏனென்றால் இரத்தம் என்பது அனைத்து உறுப்பு களுக்கும் சென்று வருவதால் அது அத்தனை உறுப்பு களையும் இணைக்கின்ற பாலமாக இருக்கும் என்பதை எப்படியோ கிருமிகள் தெரிந்தே வைத்தி ருக்கின்றன.

இப்போதுதான் நம்முடைய உடலில் ஒரு மகாபலி யுத்தமே ஆரம்பமாகும். நமது இரத்தத்தில்தான் முக்கிய மான போர்படைத் தளபதிகள், வீரர்கள் எல்லாருமே மையமிட்டிருப்பார்கள். இரத்தத்திற்குள் வந்த உடனேயே கிருமிகளுக்கும் நம்முடைய போர்ப்படை வீரர்களான இரத்த வெள்ளையணுக்கள், மேக்ரோ பேஜ்கள் மற்றும் லிம்போசைட்டுளுக்கும் இடையே கொலைவெறி தாக்குதல் நடக்கும். இத்தகைய காரணங்களால்தான் இரத்தத்தில் இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிப்பதும், அதேசமயம் மருத்துவமனையில் காய்ச்சலென்று சென்று பரிசோதிக்கையில் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைப் பார்த்து மருத்து வர்கள் கிருமிதொற்று இருக்கிறதே என்று எச்சரிப்ப தையும் புரிந்து கொள்ளலாம். இந்த யுத்தத்தில் இரண்டு தரப்பிலும் பயன்ப டுத்துகிற ஆயுதங்கள் எல்லாமே வெடி மருந்துகள்தான்.  அதாவது ஏராளமான நொதிகள், இன்டர்லியூகின்ஸ், TNF-சைட்டோகைன்ஸ் போன்ற எறிகுண்டுகள் சண்டையின்போது கிருமிகளின்மீது தூக்கி வீசப்படு கின்றன. அப்படி கிருமிகளும் போர்வீரர்களும் எதிரத்துச்  சண்டையிடும் போது ஒன்றையொன்று கொல்வதற்காக  பயன்படுத்துகிற வெடிமருந்துகளால் உடலின் மற்ற ஆரோக்கியமான செல்களும், உள்ளுறுப்புகளும் கூட பாதிப்படைகிறது. மருத்துவர்கள் இப்படி வெளியாகிற ஆன்டிஜன், இம்யுனோகுளோபின்களை(IgG, IgM) வைத்தும் ஆய்வகங்களின் வழியே கிருமித்தொற்று இருப்பதை உறுதி செய்கிறார்கள். இப்படியான அகோர சண்டையினால் வெளி யிடப்படுகிற மருந்துகளில் இண்டர்லியூக்கின்-1 என்ற  மூலக்கூறானது இரத்தத்தின் வழியே மூளைக்குள் சென்று இரு, எங்க அம்மாகிட்ட சொல்லித் தரேன்  என வெப்பநிலை கட்டுப்பாட்டு மையமான ஹைப்போத லாஸிடம் போய் பற்ற வைத்துவிடுகிறது. உடனே, ஆஹா! அப்படியா சங்கதி. அசலூர்க்காரன் நம்ம ஊருக்கே வந்து, நம்ம கிட்டயே வாலாட்டுரானா என  கோபத்தின் உச்சிக்கே செல்கிறது. ஆனாலும் ஹைப்போதலாமஸிற்கோ ஒரே குழப்பம். கிருமிகள்  இரத்தத்தில் கலந்துவிட்டதால் எங்கே, எந்த உறுப்பில் இப்போது சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விடை தெரியாமல் குழம்பிப் போய், இறுதியில்  இனியும் தாமதம் வேண்டாம் என்று ஒரு முடிவிற்கு வருகிறது.

நம்முடைய உடல் உறுப்புகளெல்லாம் சீராக வேலை  செய்யவதற்கென்று சராசரி உடல் வெப்பநிலை  இருப்பதுபோல, கிருமியும் குறிப்பிட்ட வெப்பநிலை யில்தானே உயிர்வாழ முடியும். அதேசமயம் தண்ணீரை குறிப்பிட வெப்பநிலையில் கொதிக்க வைத்தால் கிருமிகள் இறந்துவிடுவதைப்போல, உடலின்  வெப்பநிலையையே உயர்த்திவிட்டால் உள்ளிருக்கிற கிருமிகளும் இனிமேல் இங்கு உயிர்வாழ முடியாது  என்று இறந்துவிடும் அல்லவா. ஆக, இந்த சித்தாந்தத்தை ஹைப்போதலாமஸ் கையிலெடுத்துக் கொண்டு உடலின் உள் மைய வெப்பநிலையை சராசரி யான 98.6° F என்கிற நிலையிலிருந்து கிருமியின் அதா வது எதிரியின் பலத்தை பொருத்து 100° F என்றோ, 105° F என்றோ கூட்டிவிடுகிறது. மூட்டை பூச்சியை கொழுத்துகிறேன் என்று வீட்டையே கொழுத்திய கதையாக எங்கோ ஓர் உறுப்பில் ஏற்பட்ட நோய்த்தொற்றால் அடுத்ததாக உடல் முழுவதுமே காய்ச்சலால் பற்றியெரிய ஆரம்பிக்கிறது. ரேடியோவில் அலைவரிசைக்கேற்ப பட்டனை திருகித்திருகி ஒரு புள்ளியில் செட்செய்து பாட்டைக்  கேட்பதைப்போல ஹைப்போதலாமஸூம் இரத்ததி லிருந்து வருகிற இண்டர்லியூக்கின் சிக்னலுக்கு ஏற்ப இப்போ ஓகேவா? இந்த வெப்பம் போதுமா? என்று 100டிகிரி.. 102 டிகிரி.. என்று உயர்த்திக் கொண்டே போகிறது. அப்படி உயர்த்திக் கொண்டு போகும்போது உதாரணத்திற்கு உள்நுழைந்த கிருமி 105 டிகிரி வெப்பநிலையில் தாக்குப் பிடிக்காமல் இறந்துவிடும் என்று ஹைப்போதலாமஸிற்கு தெரிந்து விட்டால் 105டிகிரியில் கொண்டுபோய் உடலின் உள் மைய வெப்பநிலையை இப்போதைக்கு இதுதான் என்று தற்காலிகமாக செட் செய்துவிடும். ஆக, இனிமேல்தான் நம்முடைய உடலில் நினைத்துக்கூட பார்க்க முடியாத சுவாரஸ்மான விசயங்களெல்லாம் நடைபெறப் போகின்றன. 

(தொடர்ச்சி அடுத்த வாரம்)
-டாக்டர் இடங்கர் பாவலன்
idangarpavalan@gmail.com